பழிவாங்கும் நோக்கில் தனது மனைவி மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்த கணவருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மனைவிக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர் 2016 முதல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பராமரிப்புத் தொகை கேட்ட மனைவியைத் துன்புறுத்துவதற்காக ஒரு வழக்கறிஞரான கணவர், சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்தார்.
இதனால் கணவர் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்தும், மனைவிக்குப் பணம் தருவதைத் தவிர்க்க வேண்டுமென்றே தனது பதவிகளை ராஜினாமா செய்ததையும் நீதிபதிகள் விசாரணையில் கண்டுபிடித்தனர். இந்தத் திருமண உறவை இனி மீட்டெடுக்க முடியாது என்பதை உணர்ந்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி தம்பதியினருக்கு உடனடியாக விவாகரத்து வழங்கியது.
மேலும், அடுத்த ஒரு ஆண்டுக்குள் மனைவிக்கு 5 கோடி ரூபாய் பராமரிப்புத் தொகையை கணவர் வழங்க வேண்டும் என்றும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தும் தீர்ப்பளித்தனர். சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி மனைவியை அலைக்கழித்த கணவருக்கு, இந்த 5 கோடி ரூபாய் அபராதம் மற்றும் வழக்கின் ரத்து ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.
