“பள்ளி மைதானத்தில் விழுந்த 11-ஆம் வகுப்பு மாணவன்”… 10 நிமிடம் யாரும் பார்க்கவில்லையா?… சென்னையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்…!

By Nanthini on ஆனி 12, 2026

Spread the love

சென்னையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த சர்வேஷ் என்ற மாணவன், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். மாணவன் விழுந்தவுடன் தாமதிக்காமல் உடனடியாக முறையான முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் அவனது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என அவதிப்படும் பெற்றோர் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். இந்த துயர சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு முறையான மற்றும் தெளிவான பதிலை அளிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்த மாணவனின் பாட்டி கூறுகையில், தங்களுக்குப் பள்ளி நிர்வாகத்திடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில், மாணவனை ராஜாஸ் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகக் கூறப்பட்டதாகவும், ஆனால் அங்கு சென்று பார்த்தபோது அவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். காலையில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்ற தங்களது பிள்ளை, மைதானத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக மயங்கிக் கிடந்தும் யாரும் உடனடியாகக் கண்டுகொள்ளவில்லை என்றும், தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.