நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார மாணவ மாணவிகள் ஏராளமாக படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பள்ளி தொடங்கியது. 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவனுடைய புத்தகப் பையில் புத்தகத்திற்கு இடையே கத்தி மறைத்து கொண்டு வந்துள்ளான். இதை ஆசிரியர் ஒருவர் பார்த்து தலைமை ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளார். தலைமை ஆசிரியரோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார் .
பின்பு போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த மாணவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து அவனை விசாரித்தனர். என்னை இப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று கத்தியை காட்டி என்னை மிரட்டினார் எனக்கு மிகவும் பயமாக இருந்தது அதனால் முன்னெச்சரிக்கையாக புத்தகத்தில் கத்தியை மறைத்து கொண்டு வந்தேன் என்று விசாரணையில் அந்த மாணவன் கூறியிருந்தார். இத்தகவலை கேட்ட ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் பேரதிர்ச்சி. பின்னர் மாணவரை போலீசார் எச்சரித்து விட்டு புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
