வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த சட்டத்தின்படி வாடகை வீட்டில் குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி வாடகைக்கு விடக்கூடிய ஒருவர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளும் கட்டாயமாகி உள்ளது. இதன் மூலம் இனி இரண்டு மாத வாடகை முன் பணமாக கொடுத்தால் போதுமானது. வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி வீடு வாடகைக்கு எடுப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் இருவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் உள்ளது. வீட்டை வாடகைக்கு விட்டால் அந்த ஒப்பந்தத்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். முன்பு சாதாரண ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும் இல்லை என்றால் ஐந்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்து இடக்கூடாது. வீட்டு வாடகைக்கு இரண்டு மாத வாடகைக்கு மேல் முன் பணம் கேட்கக்கூடாது. ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதம் கழித்து தான் வாடகை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் இரண்டு மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் மூலம் வாடகைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வீட்டில் பழுது ஏற்பட்டால் உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் வாடகைதாரர்களை அதை சரி செய்து வாடகை தொகையில் கழித்துக் கொள்ளலாம்.
