தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் தனித்தனியாக எப்போதும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு இன்றுவரை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலந்துள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை ஐந்து அண்ணாதுரை, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் வி என் ஜானகி என இதுவரை ஐந்து முதல்வர்கள் கிடைத்துள்ளனர். இந்த வரிசை இப்போது விஜய் வரை வந்து நிற்கிறது.
இப்படி பலர் தமிழக அரசியலில் பல திரைக்கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்தது யார் என்று தெரியுமா? அது இதுவரை பலரும் அறியாத தகவல். தமிழ் சினிமாவில் தன்னுடைய கந்தர்வக் குரலால் மயக்கிய மறைந்த நடிகை கே பி சுந்தராம்பாள்தான் அது. இவர் காங்கிரஸ் சார்பாக 1958 ஆம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராக அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் சட்டமன்றத்துக்குள் முதல் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக சென்றது யார் தெரியுமா? நீங்கள் நினைப்பது போல எம் ஜி ஆர் இல்லை. லட்சிய நடிகர் என போற்றப்பட்ட எஸ் எஸ் ராஜேந்திரன்தான். பெரியாரின் தீவிர தொண்டரான எஸ் எஸ் ஆர் திமுகவில் இணைந்து 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனது தொகுதியான தேனியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம் எல் ஏ வாக சட்டமன்றம் சென்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்து எம் எல் ஏ ஆன முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார்.
நாடகங்களில் நடித்து பிரபலமான எஸ்.எஸ்.ஆர், சிவாஜி கணேசன் அறிமுகமான ’பராசக்தி’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பிச்சைக்காரன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதன் பின்னர் அவரை பிரபல நடிகராக்கியது ரத்தக்கண்ணீர் திரைப்படம்தான். அதன் பின்னர் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்தார்.
பிஸியான நடிகராக வலம் வந்த இவர் 1980 களுக்குப் பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இவரின் கடைசி திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியான தீக்குச்சி. இவர் 2014 ஆம் ஆண்டு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.