சூரி பரோட்டா சாப்புட்ற காமெடி சீன் என்னோடது… சுசீந்தரன் அத எடுத்துகிட்டாரு- இயக்குனர் எழில் பகிர்ந்த தகவல்!

By vinoth on ஜூலை 9, 2024

Spread the love

இயக்குனர் எழில் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் எழில் இயக்க விஜய், சிம்ரன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் திரைப்படத்தின் தாக்கத்தில் இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் எழில்.

இந்த படத்தின் வெற்றியால் எழில் கவனிக்கப்படும் இயக்குனரானார். அதைத் தொடர்ந்து அவர் பிரபுதேவா நடிப்பில் பெண்ணின் மனதைத் தொட்டு, அஜித்தோடு பூவெல்லாம் உன் வாசம் மற்றும் ராஜா ஆகிய படங்களை இயக்கினார். அவர் இயக்கிய ராஜா திரைப்படம் நல்ல வெற்றியைப் பெறவில்லை. அதனால் அவர் சினிமாவில் ஒரு இடைவெளியை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.

   

அதன் பிறகு அவர் ஜெயம் ரவி, பாவனா ஆகியோர் நடிப்பில் தீபாவளி என்ற படத்தை காதல் பின்னணியில் உருவாக்கினார். இந்த படத்தில் சூரி ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அப்போது அவரின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்ட இயக்குனர் எழில், அவருக்காக ஒரு பரோட்டா காமெடி சீனை எழுதியுள்ளார். ஆனால் படத்தின் நீளம் காரணமாக அந்த காட்சியை எடுக்கவில்லை.

   

அந்த படம் முடிந்ததும், அந்த படத்தின் இணை இயக்குனராக இருந்த சுசீந்தரன், வெண்ணிலா கபடிக்குழு படத்தை இயக்கினார். அந்த படத்தில் சூரிக்கு முக்கியமான வேடத்தைக் கொடுத்தார். இந்நிலையில் தீபாவளி படத்துக்காக எழுதப்பட்ட பரோட்டா காமெடி சீனை இந்த படத்தில் வைத்துள்ளார்.

 

இது சம்மந்தமாக இயக்குனர் எழிலிடம் போன் செய்து “அந்த சீனை நான் வச்சிக்குறேன் சார்” எனக் கேட்டாராம். அதற்கு எழில் “நல்ல சீன்டா அது. கெடுத்துடாம வை” என சொன்னாராம். அதன் பின்னர் படம் பார்த்துவிட்டு “அந்த காட்சியை சூரி மற்றும் சுசீந்தரன் ஆகிய இருவரும் சிறப்பாகவே எடுத்துள்ளார்கள்” எனப் பாராட்டினாராம். இந்த தகவலை சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் எழில் பகிர்ந்துள்ளார்.