திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தஸ்லீமா தனது தாய் ஆசியம்மாள் (48) வீட்டில் வசித்து வந்தார். மேலும், அவர் தனது கணவரை விவாகரத்து செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய அஜ்மத் உசேன், கடந்த 16-ம் தேதி இரவு அமராவதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தஸ்லீமா பேகமும் குழந்தைகளும் வீட்டில் இல்லாத நிலையில், மாமியார் ஆசியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அஜ்மத் உசேன் கோரிக்கை விடுக்க, அதற்கு ஆசியம்மாள் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி அஜ்மத் உசேனைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தலைமறைவாக இருந்த அஜ்மத் உசேனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், “நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழவே ஆசைப்பட்டேன்; ஆனால் அதற்கு என் மாமியார் இடையூறாக இருந்தார். அவர் இருக்கும் வரை என் குடும்பம் ஒன்று சேராது என்பதால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
