“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

By Soundarya on சித்திரை 19, 2026

Spread the love

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு போலீஸார் தோண்டியெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திப்பூர் மாவட்டம் சிங்கியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, சுமார் 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அந்தப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்துப் பெண்ணின் வீட்டாருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல், கணவர் வீட்டாரே உடலை ரகசியமாக அடக்கம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் இதுகுறித்துத் தகவல் அறிந்து கேட்டபோது, அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை.

தனது மகளை வரதட்சணைக்காகத் தூக்கிட்டுப் படுகொலை செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய பெற்றோர், இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் ஆரம்பத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை (SP) அணுகி முறையிட்டனர். அவரது உத்தரவின் பேரில், மாஜிஸ்திரேட் முன்னிலையில், அடக்கம் செய்யப்பட்டு ஒரு மாதம் 3 நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது.

   

தற்போது மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் உறுதியானால் கணவர் வீட்டார் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மகளைப் பறிகொடுத்து நீதிக்காக ஒரு மாதமாகப் போராடிய பெற்றோரின் நிலை அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.