திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த இருளஞ்சேரி கிராமம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த இளையராஜா(30) என்பவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி சாந்தி (20). இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இளையராஜாவின் தம்பி இசை மேகத்துக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது அவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார். இதனிடையே அண்ணி சாந்தி இசை மேகத்தின் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மனைவி கர்ப்பமாக இருப்பதை அண்ணி சாந்தி கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசை மேகம் சாந்தியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சாந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ள இசை மேகத்தை தேடி வரும் நிலையில் அண்ணியை கொழுந்தன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
