சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தன. அவர் சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். அதே சமயத்தில் அவரது உடல் எடையும் அதிகரித்திருந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என்றே பேச்சுக்கள் அடிபட்டன.
எனினும் அதன் பின் தனது உடலை கட்டுக்குள் கொண்டு வந்து “ஈஸ்வரன்”, “மாநாடு” போன்ற திரைப்படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அவர் என்னதான் ரீ என்ட்ரி கொடுத்தாலும் அவரை பிரச்சனைகள் விட்டபாடு இல்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் “அன்பானவன், அசராதவன், அடங்காதவன்”. இத்திரைப்படம் சிம்புவின் கெரியரில் மிகவும் சுமாரான திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.
இத்திரைப்படத்திற்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. ஆதலால் எடுக்கப்பட்ட காட்சிகளை மட்டும் எடுத்து ஒட்டி இத்திரைப்படத்தை வெளியிட்டார்கள். எனினும் இத்திரைப்படம் படுதோல்வியடைந்ததால் மைக்கேல் ராயப்பனுக்கு ரூ.15 கோடி நஷ்டமடைந்தது.
இந்த விவகாரத்தில் சிம்பு மைக்கேல் ராயப்பனிடம் இந்த இழப்பிற்கு பதிலாக வேறு ஒரு படத்திற்கு கால்ஷீட் தருவதாக கூறியிருந்தார். ஆனால் சிம்பு கால்ஷீட் தரவில்லை. இதனால் கோபமடைந்த மைக்கேல் ராயப்பன் தனக்கு நீதி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினார்.

சிம்பு தற்போது மணிரத்னத்தின் “தக் லைஃப்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இதனிடையே சிம்பு மைக்கேல் ராயப்பனுக்கு இழப்பீடு தொகையை கொடுத்துவிட்டதாகவும் இந்த பிரச்சனை முடிந்துவிட்டது எனவும் சில நாட்களுக்கு முன் செய்திகள் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, “சிம்பு மைக்கேல் ராயப்பனுக்கு இழப்பீடு தொகையை தந்துவிட்டதாக செய்திகள் பரவுகின்றன. ஆனால் நான் மைக்கேல் ராயப்பனுக்கு ஃபோன் போட்டு கேட்டேன். அவர் இது போல் எதுவும் நடக்கவில்லை என்று கூறினார். சிம்பு தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை மீடியாக்களில் பரப்பிவிடுகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
