சமீப காலமாக பல திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அத்திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் 20 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய விஜய்யின் “கில்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் போன்ற பலரின் நடிப்பில் வெளிவந்த “கில்லி” திரைப்படம் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமோக வெற்றிபெற்றது. 90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய இத்திரைப்படத்தை இத்தனை ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் பல முறை பார்த்திருந்தாலும், நேற்று ரீரிலீஸ் செய்யப்பட்டபோது ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.
தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்று ரீரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் பிரான்ஸ், UK போன்ற நாடுகளிலும் பல திரையரங்குகளில் “கில்லி” திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது..
தமிழக திரையரங்குகளில் திரையில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் மிக உற்சாகத்தோடு கண்டுகழித்த வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன. அதே போல் “அப்படி போடு”, “அர்ஜுனரு வில்லு”, “கில்லி கில்லி” போன்ற பாடல்களுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் நடனமாடி கொண்டாடி தீர்த்த வீடியோக்களும் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. இவ்வாறு 20 வருடங்கள் கழித்தும் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமாக “கில்லி” சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் “கில்லி” ரீரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து அது குவித்திருக்கும் வசூல் சாதனையை குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது நேற்று “கில்லி” திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாம். மேலும் ஒரே நாளில் ரூ. 3ல் இருந்து 4 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தனஞ்சயன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.