தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்படியான சூழலில் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெறுகிறது. மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநாட்டில் விஜய் குட்டி கதை ஒன்றை சொன்னார். அதாவது, ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக இருக்க தளபதியை தேடினார். அதற்காக பத்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒரு நெல் விதை கொடுத்து வளர்த்து வர கூறினார். ஒன்பது பேர் பொய்யாக செடியை வளர்த்த நிலையில் ஒருவர் மட்டும் செடி வளரவில்லை என உண்மையை கூறியுள்ளார்.
ஏனென்றால் அவர்களிடம் கொடுத்தது அவித்த விதை, அது முளைக்காது. ஒன்பது பேரும் பொய்யான விதையை வைத்து செடி வளர்ந்து விட்டதாக பொய் சொல்லியுள்ளனர். உண்மையை சொன்னவரை ராஜா தளபதியாக தேர்ந்தெடுத்தார். அதேபோல ராஜாவாக இருக்கும் மக்கள் உண்மையான தளபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
