கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அஸ்வின் ராஜ் (22) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில், அஸ்வின் அந்தச் சிறுமியுடன் பழகி, அவருக்கு வலுக்கட்டாயமாக கஞ்சா கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி, அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்குள்ள மருத்துவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த குற்றவாளி அஸ்வின் ராஜை மடக்கிப் பிடித்த போலீசார், அவர் மீது போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர்.
