உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த தசரத் படேல் (60) என்பவர் ஏமாற்றித் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது பயிற்சி மையம் திறப்பதற்காக வெளியே காத்திருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட தசரத் படேல் தான் நடத்தி வந்த நோயியல் சிகிச்சை மையத்திற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று இந்தத் துரோகத்தை இழைத்துள்ளார்.
இந்தக் கொடுமை இத்துடன் நின்றுவிடாமல், 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 2025-ஆம் ஆண்டு வரை என சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பெண்ணை மிரட்டியும் அச்சுறுத்தியும் தசரத் படேல் தொடர்ந்து பாலியல் ரீதியாகச் சுரண்டி வந்துள்ளார். இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணுக்கு, கடந்த 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் நல்ல குணத்தைக் கண்டு நெகிழ்ந்த அப்பெண், தனக்கு இத்தனை ஆண்டுகளாக நேர்ந்த அநீதியையும் அவலத்தையும் அவரிடம் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
மனைவியின் நிலையை உணர்ந்து அவருக்கு முழு ஆதரவளித்த கணவர், நீதிக்காகப் போராடப் போவதாக முடிவு செய்து, மனைவியுடன் இணைந்து மூத்த காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட தசரத் படேல் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மிர்சாமுராத் காவல் நிலைய அதிகாரி கோபால்ஜி குஷ்வாஹா வழக்குப் பதிவு செய்துள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளியைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும், அவர் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
