“கழிப்பறையில் அடைத்து வைத்து.. 7 வயது சிறுமியை சீரழித்த வெறிச்செயல்..! 13 வயது சிறுவர்களா இப்படி..? வங்கதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!”

By Swetha on ஆனி 9, 2026

Spread the love

வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை, ‘யபா’ என்ற போதைப்பொருளுக்கு அடிமையானதாகக் கூறப்படும்13அல்லது 14 வயதுடைய மஜ்னு மற்றும் கமல் என்ற இரு பதின்ம வயது சிறுவர்கள், அக்குழந்தையை வீட்டின் அருகில் இருந்து கடத்திச் சென்று ஒரு கழிப்பறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், கோலகான் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த அந்த இரு சிறுவர்களையும் வங்கதேச காவல்துறை கைது செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவர்கள், காஜிபூரில் உள்ள சிறுவர் மேம்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடமும், அண்டை வீட்டாரிடமும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அச்சிறுமிக்கு தொடர்ச்சியான உள் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று, குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் தாய், இரத்தப்போக்கை நிறுத்தும் முயற்சியாக அச்சிறுமியை கோலகான் சந்தையில் உள்ள பஷீர் அகமது என்ற உள்ளூர் கிராமத்து மருத்துவரிடம் அழைத்துச் சென்று 400 டாக்கா மதிப்புள்ள மருந்தை வாங்கியுள்ளார். சந்தேக நபரின் தாயும், அந்த மருத்துவரும் இணைந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்குச் செல்வதையோ அல்லது காவல்துறையிடம் புகார் அளிப்பதையோ தடுக்க முயன்றதாக வழக்கு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் இரத்தப்போக்கை நிறுத்த அடிப்படை மருந்து மட்டுமே வழங்கியதாகவும், குற்றத்தை மூட மறைக்க முயலவில்லை என்றும் மருத்துவர் பஷீர் மறுத்துள்ளார்.

   

தொடர்ச்சியான இரத்தப்போக்கினால் சனிக்கிழமை பிற்பகலில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் தலையிட்டு, அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் சட்ட உதவிக்காக அச்சிறுமியை தாஹிர்பூர் சுகாதார வளாகத்திற்கும் காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சுனாம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் ஏபிஎம் ஜாகிர் ஹொசைன் கூறுகையில், குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த கொடூரமான சம்பவம் குறித்த விசாரணையை விரைவாக முடித்து, கூடிய விரைவில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.