உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 14 வயது எட்டாம் வகுப்பு மாணவியை, விம்லேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கரும்புத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சம்பவத்தின் போது உடன் இருந்த 8 வயது சிறுவன், சிறுமியின் தாயாரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் நவாப்கஞ்ச் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போக்சோ மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை மூத்த காவல் கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா நேரில் ஆய்வு செய்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்காக 3 தனிப்படைப் பிரிவுகளும், சிறப்பு நடவடிக்கைக் குழுவும் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட விம்லேஷ் என்பவரின் அடையாளம் தெரியவந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை அடையாளம் காணவும் இருவரையும் கைது செய்யவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஒத்துழைக்குமாறு காவல் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
