தூங்கிக்கொண்டிருந்த 7 பேருக்கு நள்ளிரவில் தீ வைத்த மனைவி… 11 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…. மதுரையை உலுக்கிய பரபரப்பு தீர்ப்பு….!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள குமாரபுரத்தில், குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டைப் பூட்டி எரித்துக் கொன்ற வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமாரபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (25) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி (32) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் சேர்த்து வைக்க முயன்றும் கண்ணன் மறுத்துவிட்ட நிலையில், ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி (51) மற்றும் சகோதரர் ராஜபாண்டி (30) ஆகியோர் இணைந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு மே 20 அன்று அதிகாலை வேளையில், கண்ணன், அவரது தந்தை வேலு (60), தாய் பேச்சியம்மாள் (55), சகோதரி சுகந்தி (35) மற்றும் அவரது 3 குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த வீட்டை வெளியிலிருந்து பூட்டி, ஜன்னல் வழியாக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தனர். இதில் வீட்டில் இருந்த 7 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சேடபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மதுரை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உதயவேலவன், குற்றம் சாட்டப்பட்ட பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி மற்றும் ராஜபாண்டி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ₹45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.