பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அர்னா கிராமத்து மசூதிக்குள் 50 வயதான முகமது ஷபிக் என்ற இமாம் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் போரே காவல் எல்லைக்கு உட்பட்ட சிசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், நீண்ட காலமாக இந்த மசூதியில் இமாமாகப் பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவில் மசூதி வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் இவரைத் தாக்கியதில், பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து ஹதுவா துணைக் கோட்ட காவல் அதிகாரி ஆனந்த் மோகன் குப்தா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையாளியை அடையாளம் காணவும், குற்றத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் நடமாடினார்களா என்பது குறித்து உள்ளூர்வாசிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இமாம் முகமது ஷபிக்கிற்கு யாரேனும் எதிரிகள் அல்லது முன்பகை இருந்ததா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை கொலையாளி யார், இதற்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
