“எனக்கு மட்டும் ஏன் இந்த சிபிஐ சம்மன்?, அனைவருக்கும் அனுப்புங்க” – கொதித்தெழுந்த செந்தில் பாலாஜி..!

By Nanthini on பங்குனி 12, 2026

Spread the love

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, தற்போது விஜய்க்கு மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வரிசையில், தற்போது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். கரூரில் துரதிர்ஷ்டவசமான அந்தச் சம்பவம் நடந்தபோது, அங்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அந்த அடிப்படையில் அவருக்கும் விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

   

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “சம்பவம் நடந்தபோது நானும் அங்கு சென்று மக்களுக்கு உதவினேன்; ஆனால், அந்தப் பகுதியில் அப்போது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்றிருந்தார்கள். அப்படியென்றால் எல்லோருக்கும்தானே சம்மன் அனுப்ப வேண்டும்? எனக்கு மட்டும் ஏன் இந்தச் சம்மன் என்று தெரியவில்லை” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

இருப்பினும், இந்த விவகாரத்தில் தான் அதிக ஆழமாக எதையும் பேச விரும்பவில்லை என்றும், விசாரணைக்குச் சென்ற பிறகு என்ன கேட்கப்போகிறார்கள் என்பதைப் பார்த்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு துயரமான நிகழ்வின் பின்னணியில் நடக்கும் இந்த சிபிஐ விசாரணை அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.