தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். விஜய் ஆனந்த கண்ணீர் சிந்தும் அளவிற்கு தொண்டர்களின் அன்பு அந்த இடத்தில் நிறைந்திருந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்க்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்த விஜய் மூத்த தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு கட்சி கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து கட்சியின் கோட்பாடுகள் வாசிக்கப்பட்டன. அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தனது தொண்டர்களுடன் உரையாற்ற தொடங்கிய விஜய் ஒரு குழந்தை மற்றும் பாம்பு கதையை சொல்லி தனது உரையை தொடங்கினார். அப்படி தனது முதல் மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றி பேசினார். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தவெக- வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார் மற்றும் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் ஒரு குடும்ப சுயநல கூட்டம் நமது அரசியல் எதிரி என்று விஜய் பேசி இருந்தார்.

உலக வரலாறு மற்றும் மேற்கோள்கள் என mp3 ஆடியோ போல கொந்தளிப்பதாக பேசுவது எனது அரசியல் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கினார். இந்த நிலையில் விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய சீமான், திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என தம்பி விஜய் சொல்வது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. இரண்டுமே வேறு வேறு தான். மணியரசன் சொல்வது போல சொல்ல வேண்டும் என்றால் ஒன்று சாம்பார் என சொல்ல வேண்டும் இல்லையென்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும்.
![]()
கருவாட்டு சாம்பார் என்று சொல்லக்கூடாது. விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? அவருடைய கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்துப் போகவில்லை. எங்கள் தாய் மொழி தான் எங்களுக்கு கொள்கை மொழி. எங்களுக்கு மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன். வரலாற்று மற்றும் காலம் எனக்கு இந்த பணியை கொடுத்தது. என் பயணம் என் கால்களை நம்பித்தான். தனித்து தான் போட்டியிடுவேன் யாரோடும் கூட்டணி இல்லை. என் பாதையும் அவரின் பாதையும் வேறு வேறு என்று சீமான் தெரிவித்துள்ளார்.
