அமெரிக்கக் கடற்படை செயலாளர் ஜான் பெலன் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் கடற்படையை நவீனப்படுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத்துடன் கப்பல் கட்டும் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடே பெலனின் பதவி நீக்கத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கக் கடற்படையை உலகின் முதன்மை சக்தியாக மாற்றும் டிரம்பின் தொலைநோக்குப் பார்வைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் நீக்கப்பட்டதால், பென்டகன் இப்போது புதிய உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
சீனாவின் வளர்ந்து வரும் கடற்படை பலத்திற்குப் போட்டியாக, அமெரிக்கா “டிரம்ப் வகை” (Trump-class) என்ற புதிய தலைமுறை போர்க்கப்பல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இவை ஆளில்லாமல் தானாக இயங்கும் (Autonomous) திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ‘யுஎஸ்எஸ் டிபையன்ட்’ (USS Defiant) என்ற அதிநவீன போர்க்கப்பல் தயாரிக்கப்பட உள்ளது. லேசர் ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணை அமைப்புகளைக் கொண்ட இந்த ஒரு கப்பலை மட்டும் உள்நாட்டிலேயே உருவாக்க சுமார் ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் 3 அதிநவீன போர்க்கப்பல்களை சுமார் ரூ.4 லட்சம் கோடி செலவில் கட்டி முடிக்க அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தானியங்கி போர் நுட்பங்கள் மூலம் கடல் எல்லையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். ஜான் பெலன் வெளியேறியுள்ள நிலையில், இந்த மெகா திட்டத்திற்கான பணிகள் இனி மின்னல் வேகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
