இந்தியப் கலாச்சாரத்தில் தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, அது மக்களின் உணர்வோடும் பொருளாதார பாதுகாப்போடும் கலந்த ஒரு சொத்தாகும். இதனாலேயே இந்தியா ஆண்டுதோறும் சுமார் 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இந்த அதீத இறக்குமதியால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவில் செலவிடப்பட்டு, பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. புகழ்பெற்ற கோலார் தங்க வயல் (KGF) மூடப்பட்ட பிறகு, உள்நாட்டுத் தங்க உற்பத்தி மிகச் சொற்பமாகவே இருந்தது. இந்த இக்கட்டான நிலையை மாற்றும் வகையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ‘ஜொன்னகிரி தங்கத் திட்டம்’ (Jonnagiri Gold Project) உதயமானது, இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முதல் பெரிய அளவிலான தனியார் தங்கச் சுரங்கமான இது, சுமார் ₹400 கோடி முதலீட்டில் 598 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஜொன்னகிரி, எர்ரகுடி மற்றும் பாகிதிராயி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், வெறும் 13 மாதங்களில் கட்டுமானப் பணிகளை முடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1,000 கிலோ (1 டன்) தங்கத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் மொத்தத் தங்கத் தேவையில் உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவாக உள்ள சூழலில், இந்த ஆலை அந்த இடைவெளியை நிரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
தங்கத்தை நிலத்திலிருந்து பிரித்தெடுப்பது என்பது சவாலான தொழில்நுட்பப் பணிகளை உள்ளடக்கியது. ஜொன்னகிரி சுரங்கத்தில், திறந்தவெளிச் சுரங்க முறையைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்பட்டு, அவை மெல்லிய துகள்களாக அரைக்கப்படுகின்றன. பின்னர், ‘புவி ஈர்ப்பு விசை’ (Gravity separation) மற்றும் ‘கார்பன்-இன்-லீச்’ (Carbon-in-leach) போன்ற நவீன வேதியியல் முறைகள் மூலம் பாறையிலிருந்து தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, இறுதியாக உருக்கு உலைகளில் தூய தங்கக் கட்டிகளாக மாற்றப்படுகின்றன. இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், மிகக் குறைந்த தாதுவிலிருந்தும் அதிகப்படியான தங்கத்தை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெறும் தங்க உற்பத்தியோடு நின்றுவிடாமல், அப்பகுதி கிராமங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களால் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படவுள்ள இந்தச் சுரங்கம், ‘ஆத்மநிர்பர் பாரத்’ கனவை நனவாக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாகும். இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 முதல் 100 டன் தங்கம் உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டால், தங்கம் இறக்குமதிக்காக நாம் செலவிடும் அந்நியச் செலாவணி பெருமளவு குறைக்கப்பட்டு, இந்தியப் பொருளாதாரம் மேலும் வலிமையடையும் என்பதில் ஐயமில்லை.
