தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி அக்ஸா ஷேக், கடந்த புதன்கிழமை மதியம் பள்ளி வளாகத்தில் இருந்து திடீரென காணாமல் போனார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அம்மாணவி, மதியம் 3 மணியளவில் தனது பள்ளிப் பை மற்றும் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளார். அவரைத் தேடிப் பார்த்த பள்ளி நிர்வாகத்தினர், மாலை 4:15 மணியளவில் பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பெற்றோ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஜகித்யால் கிராமப்புற காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். மாணவி பள்ளி வளாகத்தை விட்டு நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. மேலும், அக்ஸாவின் பள்ளிப் பையிலிருந்து ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் மீட்டனர். அதில், குடும்பத்திலும் மற்றும் சில நபர்களாலும் பிரச்சனை இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறுவதாக எழுதியிருந்தார்.
https://twitter.com/TheSiasatDaily/status/2085668197219344878/video/1
காவல்துறையினரின் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள உறவினர் வீட்டில் மாணவி அக்ஸா ஷேக் பத்திரமாக இருப்பது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அம்மாணவி ஜகித்யாலில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
