திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களைக் கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், செந்தில் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளியிலுள்ள கழிவறை நிரம்பி வழிந்ததால், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த மாணவர்களைக் கொண்டே பள்ளம் தோண்ட வைத்துள்ளார். இதனைக்கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் மாணவர்களிடம் விசாரித்தபோது, “வேலையாட்கள் வராததால் தலைமை ஆசிரியர் எங்களை இப்போதும், இதற்கு முன்பும் இதுபோன்று கழிவறை அடைப்புகளைச் சரிசெய்யச் சொன்னார்” என்று அவர்கள் இயல்பாகக் கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பள்ளிக்கூடம் என்பது அறிவு புகட்டும் தேவாலயமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களைக் கொண்டு இதுபோன்ற சுகாதாரமற்ற தூய்மைப் பணிகளைச் செய்யும் இடமாக மாறக்கூடாது எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் உடல் நலனைப் பொருட்படுத்தாமல், அவர்களைக் கடின உழைப்பிலும் கழிப்பறை தூய்மைப் பணியிலும் ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியர் மீது உடனடியாகக் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
