“10 மணிக்கு மேல் நோ என்ட்ரி..! ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!”

By Swetha on வைகாசி 23, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் தங்களது வருகையைத் தொடுதிரை அல்லது ‘டிஎன்எஸ்இடி’ (TNSED Attendance) செயலி மூலம் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நேரத்திற்குள் வருகையைப் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், அவர்கள் அன்றைய தினம் பணிக்கு வராததாகக் கருதப்படும் சூழல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சில ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தாமதமாக வருவதும், வருகைப்பதிவை முறையாகச் செய்யாமல் இருப்பதும் பள்ளி நிர்வாகத்திலும், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தவிர்க்கவும், பள்ளிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், ஆசிரியர்களிடையே பணி ஒழுக்கத்தை மேம்படுத்தவும் இந்த கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

   

திடீர் விடுப்பு அல்லது தற்செயல் விடுப்பு (Casual Leave) தேவைப்படும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், அன்றைய நாள் காலை 10 மணிக்கு முன்பாகவே தங்களுக்குரிய விடுப்பு விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது உரிய அதிகாரிகள் மூலமாகவோ சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். இந்த புதிய நடைமுறை பள்ளி நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.