தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சத்யராஜ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்த போது அவருக்கு சினிமாவில் அதிகம் பேரை தெரியாது. அவருக்கு தெரிந்த ஒரே ஆள் நடிகர் சிவகுமார் மட்டும்தானாம். அவரிடம் வந்து தனது நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். சிவகுமாரும் அவரை பல நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்புக் கேட்க சொல்லியுள்ளார்.
இதற்கிடையில் சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிவகுமாருடன் இணைந்து பயணித்துள்ளார். அப்போது சிவகுமார் நடித்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ திரைப்படத்தில் புரொடக்ஷன் மேனேஜராக எல்லாம் வேலைப் பார்த்துள்ளார். அப்படிதான் சத்யராஜ் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினாராம்.
