தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சத்யராஜ் அளித்த ஒரு நேர்காணலில் தான் எடுத்த தவறான முடிவுகள் குறித்து ஜாலியாகப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஹீரோவாக நடித்தபோது தவறான முடிவுகள் எடுப்பதில் என்னை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. நான் யானை மாதிரி. எங்கேயாவது மண் கிடந்தால், போய் நானே அதை அள்ளி என் தலையில் போட்டுக் கொள்வேன்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரெண்டு படங்களை வேண்டாம் என்றேன். அந்த ரெண்டு படங்களும் சூப்பர் ஹிட். அவர் படங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் நடித்த படங்கள் சூப்பர் ப்ளாப். உண்மையாகவே எனக்கு வயிறெல்லாம் எரியும். எப்படி தூக்கம் வரும். அதுவரை நன்றாக இருந்த முடி, அதன் பிறகுதான் எனக்கு முடி கொட்ட ஆரம்பித்தது.” எனக் கூறியுள்ளார்.
