முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று, சசிகலா ‘அம்மா அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைய எடப்பாடி பழனிசாமி தரப்பு முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், மதுரையில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தித் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய கட்சியின் மூலம் சசிகலா, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்றும், அதற்காக அந்தப் பகுதியில் இப்போதே களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்தும் அல்லது தனது தலைமையில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
