“பொள்ளாச்சியை விட கொடூரம்.. சேலத்தில் நடந்த அந்த பயங்கரம்”…. அவனை மட்டும் சும்மா விடாதீங்க…. கொந்தளித்த இயக்குனர் மோகன் ஜி…!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

சேலம் வீரப்பாண்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டிய சூழலில், இதுகுறித்த போதிய விவாதங்களோ அல்லது விழிப்புணர்வோ மக்களிடம் இன்னும் போய் சேரவில்லை என்று திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கை விட இது மிகக் கொடூரமான குற்றச்சாட்டு என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், தவெக கட்சி தொடங்குவதற்கு முன்பு அவர் திமுகவில் செயல்பட்டவர் என்றும் கூறப்படுவதால் தான், இந்த விஷயம் ஊடகங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்படாமல் செய்தி போடுவதோடு நிறுத்திக் கொள்ளப்பட்டதோ என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். எது உண்மையாக இருந்தாலும், அரசியல் பின்னணியை கடந்து அவன் ஒரு கடுமையான குற்றவாளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

மணிகண்டனின் குற்றப் பின்னணி குறித்துப் பேசிய இயக்குநர் மோகன் ஜி, “இந்த நபர் வறுமையில் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைக்காகக் கடன் வாங்கும் குடும்பத் தலைவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் உதவும் தொனியில் பழகியுள்ளார். ‘எனக்கென்று யாரும் இல்லை, இந்த பணத்தால் என்ன பயன்?’ எனப் பேசி பெண்களின் பரிதாபத்தைப் பெற்று தன் வலையில் விழ வைத்துள்ளார். பின்னர், அந்தப் பெண்களுடன் தனிப்பட்ட முறையில் வீடியோ காலில் பேசி, அவர்கள் நம்பி காட்டிய அந்தரங்கங்களை ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டி, தனது ஆசைக்கும், தனது நண்பர்களின் ஆசைக்கும் அந்தப் பெண்களைப் பணிய வைத்துள்ளார்” என்று அடுக்கடுக்கான திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

   

இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த விதம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மணிகண்டனின் மிரட்டல் தாங்காமல், அவர் அசந்த நேரம் பார்த்து அவரது செல்போனில் இருந்த வீடியோக்களைத் தனது போனுக்கு மாற்றியுள்ளார். குடும்பப் பெயர் கெட்டுவிடும் என்ற பயத்தில் முதலில் தயங்கிய அந்தப் பெண், தொல்லை எல்லை மீறிய போது காவல்துறையிடம் ஆதாரங்களை ஒப்படைத்துள்ளார். ஆனால், ஆரம்பத்தில் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், அந்த வீடியோக்களை தனியார் செய்தி சேனல் ஒன்றில் அந்தப் பெண் கொடுத்த பிறகே மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ஊடகங்கள் வரை பேசப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சம்பவம் ஏன் மறைக்கப்படுகிறது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

 

இயக்குநர் மோகன் ஜியின் முக்கியக் கோரிக்கைகள்:

  • சேலம் மணிகண்டன் வழக்கில் தமிழக அரசு உடனடியாக ஒரு தனி ஆணையம் அமைத்து விசாரணையைத் தொடங்க வேண்டும்.
  • ‘சிங்க பெண் படை’ போன்ற அமைப்புகள் மூலமாக மற்ற பெண்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தான் இயக்கிய ‘பகாசுரன்’ படத்திலும் இதுபோன்ற சமூக அவலங்களைச் சொல்லியிருந்தும் இன்னும் மனிதர்களின் புத்தி மாறவில்லை என்று வருந்திய மோகன் ஜி, இந்தச் சம்பவத்திற்கான அத்தனை ஆதாரங்களும் செய்தி சேனலிடம் பத்திரமாக இருப்பதாகவும், இந்த வீடியோவைப் பார்த்தாவது பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் தனது கோரிக்கையை முடித்துள்ளார்.