மத்திய கிழக்குப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றத்திற்கு இடையே, ஓமன் நாட்டு கடற்பகுதியில் 14 இந்திய மாலுமிகள் பயணித்த சிறிய ரகப் படகு ஒன்று நடுக்கடலில் திடீரென மூழ்கத் தொடங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமனின் ராஸ் அல் ஹத் பகுதிக்குக் கிழக்கே சுமார் 80 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இப்பிராந்தியத்தில் இந்தியர்கள் இருக்கும் கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து வரும் சூழலில், இந்த விபத்து சர்வதேச அளவில் உடனடியாகக் கவனத்தைப் பெற்றது.
ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியர்களை முதன்முதலில் அமெரிக்கக் கடற்படை கண்டறிந்தது. உடனடியாகச் செயல்பட்ட அமெரிக்கக் கடற்படையினர், இந்தியக் கடற்படை மற்றும் ஓமன் நாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததோடு, தங்களின் P-8 ரக கடல்சார் கண்காணிப்பு விமானத்தை விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து அனுப்பினர். வானில் இருந்து வீசப்பட்ட உயிர் காக்கும் ரப்பர் படகிற்கு 14 இந்தியர்களும் பத்திரமாக மாறியதால், அவர்கள் கடலில் மூழ்குவது தவிர்க்கப்பட்டது. அதே நேரத்தில், அந்த வழியே ஓமனின் சோஹார் நகரிலிருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ‘எம்.வி. ஜபல் அலி 9’ என்ற வணிகக் கப்பலும் அமெரிக்க விமானத்தின் வேண்டுகோளை ஏற்று உடனடியாகத் திசை மாறி அங்கு வந்து மீட்புப் பணியில் இணைந்தது.
இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் நல்வாய்ப்பாகப் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் உடல்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில், அந்தப் படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூழ்கியதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்பது குறித்த துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு உலகின் மிக முக்கியமான கடல் வழிப் பாதையாக விளங்கும் இந்த ஓமன் கடற்கரைப் பகுதியில், அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் போக்கு மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்கனவே கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலால் சுமார் 20,000 மாலுமிகள் அச்சத்துடன் தவித்து வரும் நிலையில், சர்வதேச கடற்படைகளின் தீவிர கண்காணிப்பு மட்டுமே இந்த 14 இந்தியர்களின் உயிரைக் காப்பாற்ற பெரும் உதவியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
