தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சற்று முன் தகவல் தெரிவித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தென் ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்க்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
