2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், அதன் பின்னணியில் நடந்த சுவாரசியமான அரசியல் நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரப்பட்ட நிலையில், திமுக அவற்றை நிராகரித்தது. இதனால் அதிருப்தியடைந்த ராகுல் காந்தி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக யோசித்ததாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் இந்த எண்ணத்தை மாற்ற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முக்கியப் பங்காற்றியுள்ளார். தவெக இன்னும் ஒரு தேர்தலில் கூடப் போட்டியிட்டு தனது வாக்கு பலத்தை நிரூபிக்கவில்லை என்றும், ராகுல் எதிர்பார்த்தது போல இளைஞர்களின் வாக்குகள் தவெகவிற்கு எந்தளவுக்குக் கிடைக்கும் என்பது தற்போதைக்குத் தெரியாது என்றும் கார்கே சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 22 ஆண்டுகால திமுக உறவை முறிப்பது கட்சியின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என அவர் ராகுலை சமாதானப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அரசியலில் பாஜகவை எதிர்கொள்ள திமுக எம்பிக்களின் ஆதரவு காங்கிரசுக்கு மிகவும் அவசியம் என்பதையும் கார்கே வலியுறுத்தியுள்ளார். மூத்த தலைவர் ப.சிதம்பரம் முன்னெடுத்த சமரசப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, திமுக வழங்கிய 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடத்தைப் பெற்றுக்கொள்ள காங்கிரஸ் தலைமை சம்மதித்துள்ளது. எதிர்கால உள்ளாட்சித் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் இதற்கு வலு சேர்த்துள்ளது.
இந்த நீண்ட இழுபறிக்குப் பின், திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தவெக 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தைக் காட்டிய பிறகு, அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்களுடன் கூட்டணி வைப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் மேலிடம் வந்துள்ளதாகத் தெரிகிறது.
