“திமுக கூட்டணி: 21 கட்சிகள்.. 234 தொகுதிகள்”…. யாருக்கு எத்தனை சீட்?…. வெளியான லேட்டஸ்ட் ரிப்போர்ட்…!

By Nanthini on பங்குனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது இக்கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட மொத்தம் 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை சில முக்கியக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

கூட்டணியின் முக்கிய அங்கமான காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் 28 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் இதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் லீக் தனது ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவெடுத்துள்ளன.

   

தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கான பங்கீடு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 202 தொகுதிகளை திமுக மற்றும் கூட்டணியில் உள்ள மற்ற 18 கட்சிகள் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. தேமுதிகவைப் பொறுத்தவரை ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலேயே திமுக கூட்டணி இவ்வளவு வேகமாகப் பணிகளை முன்னெடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொமதேக மற்றும் திராவிட வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு சிறிய கட்சிகளும் கூட்டணியில் இருப்பதால், அனைவருக்கும் திருப்திகரமான முறையில் தொகுதிகளைப் பிரித்தளிப்பது திமுகவிற்கு ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், அனைத்துக் கட்சிகளுடனும் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டு, விரைவில் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.