நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின் நடிகரானவர். அவர் முதன்முதலில் அமர்க்களம் படத்தில், காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா என்ற பாடலின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின், தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சில காட்சிகளில் வில்லனாக நடித்தார். அதைத்தொடர்ந்து இயக்குநர் அற்புதன் இயக்கிய அற்புதம் என்ற படத்தில், கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில்தான் கதாநாயகன் என்ற அந்தஸ்துக்கு ராகவா லாரன்ஸ் தரம் உயர்த்தப்பட்டார்.
அதன்பிறகு பல படங்களில் நடித்து, முன்னணி நடிகராக உயர்ந்தார். குறிப்பாக முனி, காஞ்சனா போன்ற பேய்க்கதை படங்கள், ராகவா லாரன்ஸ்க்கு நல்ல வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. குறிப்பாக அவரது நடனம் பெரிய அளவில் அவரது படங்களில் பேசப்பட்டன. தீவிர ரஜினி ரசிகரான லாரன்ஸ், தனது அபிமான நடிகர் ஸ்டைலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அடுத்து ரஜினி 171, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அற்புதம் படத்தை இயக்கிய இயக்குநர் அற்புதன் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அற்புதம் படத்துக்கு பிறகு பெரிய அளவில் வெற்றி பெறாத இயக்குநர் அற்புதனின் குடும்பம், அவரை மட்டுமே நம்பிய நிலையில் வாழ்ந்த குடும்பமாக உள்ளது. மிக சாதாரணமான நிலையில், அற்புதன் மறைவால் வறுமையில் வாடுகிற அந்த குடும்பத்துக்கு, ராகவா லாரன்ஸ் உதவி செய்வாரா, என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனெனில், கஷ்டப்படுகிற மக்களை, ஏழை எளியவர்களை தேடிச் சென்று உதவும் குணமும், பெரிய மனதும் கொண்ட ராகவா லாரன்ஸ், தன்னை முதன் முதலாக ஹீரோவாக்கிய அற்புதன் குடும்பத்துக்கு நிச்சயம் உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.