கோவையை சேர்ந்தவர் ஆர். சுந்தர்ராஜன். டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கிய டைரக்டர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
அதிமுக விசுவாசியான அவர் கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் பல தொகுதிகளுக்குச் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவர் பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ஆனால் விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த பழைய வீடியோவில் ஆர் சுந்தர்ராஜன் பேசியதாவது, விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயரை அவரது மனைவியோ, அப்பாவோ, அக்காவோ வைக்கவில்லை. கேப்டன் என்ற பெயரை மக்களும் தரவில்லை. லியாகத் அலிகான் என்ற சினிமா கதை வசனம் எழுதிய எழுத்தாளர் கேப்டன் பிரபாகரன் படத்துக்கு கதை எழுதும்போது வைத்த பெயர். அந்த லியாகத் அலிகான் இப்போது அதிமுகவில்தான் இருக்கிறார்.
ஆயிரம் பேரை காப்பாத்தீட்டு சாகறவன் கேப்டன். ஆயிரம் பேரை கொன்னுட்டு உயிரோடு இருக்கிறவன் கேப்டனா, பத்து பைசா யாருக்குமே நல்லது செய்யாதவன் விஜயகாந்த். ஒரு ஆளுக்கு பத்து பைசா தரமாட்டான். என்னை விட நாலுவயசு சின்னவன். என் படங்களில் நடித்தவன். இவனெல்லாம் தமிழ்நாட்டை ஆள ஆசைப்படுகிறான் என்று விஜயகாந்தை ஆர் சுந்தர்ராஜன் ஒருமையில் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.