அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு குறித்து காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதுரையில் இருந்து வீடியோ மூலம் பேசிய அவர், தமிழக மக்கள் ஒரு நல்லாட்சியை எதிர்பார்த்திருந்த வேளையில், கடந்த 50 நாட்களாக இந்த அரசு மக்களுக்கு வெறும் ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கும் அரசாக மட்டுமே நகர்ந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார். மேலும், அரசு நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கிய குற்றச்சாட்டாக, உளவுத்துறை அறிக்கைகள் முதலமைச்சரின் பார்வைக்குச் செல்வதற்கு முன்பாகவே ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட மூன்று அதிகார மையங்களின் கைகளுக்குச் செல்வதாக உதயகுமார் குண்டு தூக்கிப் போட்டுள்ளார். சட்டரீதியாகவும் மரபாகவும் முதலமைச்சர் மட்டுமே முதலில் பார்க்க வேண்டிய ரகசிய உளவுத்துறை அறிக்கையை, அதற்கு முன்பே இந்த அதிகார மையங்கள் பெற்று அதிகாரிகளிடம் விவரம் கேட்பது உளவுத்துறை அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் அரசின் மிக முக்கியமான ரகசியங்கள் வெளியே கசிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் கவலைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் நிலவும் இந்த குழப்பங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் பேச வேண்டிய நேரங்களில் பேசாமல் மௌனம் காப்பது மக்களுக்குப் புரியாத புதிராக நீடிக்கிறது என்று உதயகுமார் சாடியுள்ளார். அமைச்சர்கள் தங்களது தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் பொதுவெளியில் அடாவடியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் சரத், ஈகோ மோதலில் ஈடுபடும் பெண் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, மற்றும் மணல் கும்பலுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் பிரவீன் எனப் பல அமைச்சர்களின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டுத் தீவிரமாக விமர்சித்துள்ளார்.
இறுதியாக, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல், போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் தினசரி மின்தடை போன்ற விஸ்வரூபம் எடுத்துள்ள மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுகவை அழிப்பதிலேயே முதலமைச்சர் விஜய் அதிக அக்கறை காட்டி வருவதாக உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். நல்லாட்சி தருவேன் என்று கூறிவிட்டு தற்போது ‘சர்ப்ரைஸ் ஆட்சி’ நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் தங்களது ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கக் காத்திருக்கிறார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
