நான்கு ஆண்டு கால உக்ரைன் – ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். “நமக்கு இடையிலான நேரடி ஈடுபாட்டின் மூலம் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் முன்மொழிகிறது; நான் ஒரு சந்திப்பை முன்மொழிகிறேன்” என்று ஜெலென்ஸ்கி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், உக்ரைன் அதிபருடன் இப்போதைக்குச் சந்திப்பு நடப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது சொந்த நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற ரஷ்யாவின் முதன்மைப் பொருளாதாரக் கருத்தரங்கில் பேசிய அவர், “சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை ஜெலென்ஸ்கியை சந்திப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். மேலும், உக்ரைன் தரப்பு தங்களது ஆயுதப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மட்டுமே இந்தச் சந்திப்பை விரும்புவதாகவும், தங்களுக்கு வெறும் பேச்சுவார்த்தைகள் அல்லாமல் உறுதியான ஒப்பந்தங்களே தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களது போர் இலக்குகள் முழுமையாக அடையப்படும் வரை ரஷ்யாவின் இராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று புதின் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவானது உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் மீதான முழுமையான கட்டுப்பாட்டையும், உக்ரைன் மீது விரிவான அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாடுகளையும் கோரி வருகிறது. ஆனால், கீவ் நிர்வாகமும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் இக்கோரிக்கைகளை முற்றிலும் சரணடைவதற்குச் சமம் எனக் கூறி நிராகரித்துவிட்டன. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்கனவே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளும் இரு தரப்பினரையும் ஒரு உடன்பாட்டிற்கு நெருக்கமாகக் கொண்டுவரத் தவறியுள்ளதால், இந்த சர்வதேசப் பதற்றம் தற்போதைக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது.
