கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை, அவர் வழக்கம் போல கல்லூரிக்குச் சென்று வருவதாகத் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, பையுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மகள் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த மாணவியின் தந்தை ஏதோ ஒரு பணிக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது தற்செயலாகத் தனது மகளின் தோழியை வழியில் பார்த்த அவர், “என் மகள் கல்லூரிக்குச் சென்றுவிட்டாள், நீ ஏன் இன்னும் செல்லவில்லை?” என்று விசாரித்துள்ளார். அதற்கு அந்தத் தோழி, “கல்லூரி வரும் 10-ஆம் தேதிதானே திறக்கிறது, அதற்குள் ஏன் செல்ல வேண்டும்?” என்று கூற, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாகத் தனது மகளின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரிடம் பேச முடியாததால் பதற்றத்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்து மகளைத் தேடியுள்ளார்.
அப்போது மகளின் அறையில் ஒரு கடிதம் இருப்பதை அவர் கண்டு பிடித்தார். அந்த கடிதத்தில், “நான் ஒருவரை காதலித்து வருகிறேன், அவருடன் செல்கிறேன்; எனவே என்னை யாரும் தேட வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, மகளின் செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து இடங்களிலும் தேடியும் மகள் கிடைக்காததால், அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான கல்லூரி மாணவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
