மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபம், கடந்த 2018-இல் நடந்த தீ விபத்துக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறையால் புனரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “மன்னராட்சி காலத்திற்குப் பிறகு இவ்வளவு உயரமான கல் மண்டபம் தற்போதுதான் எழுப்பப்பட்டுள்ளது. 2019-இல் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இத்திருப்பணியின் தொடக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையோடு முழுமையாக உடன் நின்றேன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சு.வெங்கடேசனின் இந்தப் பதிவைச் சுட்டிக்காட்டிய நெட்டிசன் ஒருவர், “அறநிலையத்துறை விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னர் குறிப்பிட்ட நபர் இவர்தானா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த பிடிஆர், “இல்லை… இல்லை… இவர் வேறு வகை – தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத நூற்றுக்கணக்கான விஷயங்களுக்குப் பெருமை தேடிக்கொள்வதில் மட்டுமே இவர் கில்லாடி. பல மைல் தூரத்திலிருந்தே பிணத்தின் வாசனையை உணரும் கழுகைப் போன்றவர்” என்று மிகக் கடுமையான சொற்களால் கடுமையாகச் சாடியுள்ளார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2016 முதல் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். அதேசமயம், திமுக கூட்டணியில் அங்கமாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 2019 முதல் மதுரை மக்களவைத் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். கூட்டணிக்குள் இருக்கும் இரு மூத்த தலைவர்களுக்கிடையே, அதுவும் பொதுவெளியில் இத்தகைய சாடல்கள் வெளிவந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே கூட்டணிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது எட்டிப்பார்த்து வரும் சூழலில், திமுகவின் முன்னாள் அமைச்சரே கூட்டணி எம்பியை “கழுகு” என்றும் “சம்பந்தமில்லாத விஷயங்களுக்குப் பெருமை தேடிக் கொள்பவர்” என்றும் பகிரங்கமாக விமர்சித்திருப்பது மதுரை மாவட்ட அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
