சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் காரில் வெளியேற முயன்றபோது, தூத்துக்குடியைச் சேர்ந்த அதிருப்தி நிர்வாகிகள் அவரது காரை மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் இன்று காலை முதலே கட்சி அலுவலகத்தின் முன்பு தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார். கட்சிப் பதவிகள் நியமனத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி அவர் கண்ணீர் மல்க அங்கேயே அமர்ந்திருந்தார்.
கட்சி அலுவலகத்திலிருந்து விஜய் தனது காரில் கிளம்பியபோது, அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரை நிறுத்த முயன்ற தொண்டர்களை விலக்கிவிட்டு, கார் மெதுவாக நகர்ந்து சென்றது. அப்போது காரின் முன்பகுதியில் தொண்டர்கள் சிலர் மோதியபடி நின்றதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கட்சிப் பதவிகள் தொடர்பாகத் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், தலைவரின் காரையே தொண்டர்கள் மறித்த இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
