நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில், மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் ஆண்டுப் பள்ளிக் கட்டணம் ரூ.86 லட்சம், இதர சிறப்பு வகுப்புகளுக்கான கட்டணம், வீட்டுக் கடன் தவணை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்தே அந்தத் தொகை கணக்கிடப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மேலும், நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவின்படி, பிள்ளைகளின் கல்விச் செலவுகளுடன் சேர்த்து, ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சமும், இரு மகன்களுக்குத் தலா ரூ.1 லட்சமும் பராமரிப்புத் தொகையாக ரவி மோகன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிள்ளைகளின் பராமரிப்புச் செலவுகளை ரவி மோகன் கவனிக்கவில்லை என்றும், கடன் நிலுவையால் வீடு ஜப்தி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தான் தன் மகளை ரவியிடமிருந்து பிரிக்க நினைக்கவில்லை என்றும், யாருடைய சொத்தையும் அபகரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் சுஜாதா கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரவி மோகன் தன் பிள்ளைகளைச் சந்திக்கலாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
