காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் எதிர்ப்பு தெரிவித்துக் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகப் பெங்களூரில் உள்ள முகுந்தா திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட பேனரைச் சிவக்குமார் நாயக் தலைமையிலான கன்னட அமைப்பினர் துண்டு துண்டாகக் கிழித்து எறிந்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிவக்குமார் நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தமிழில் ஆபாச வார்த்தைகளால் திட்டி ஜனநாயகன் பேனரைக் கிழித்ததற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்த சிவக்குமார் நாயக், தனக்குத் தமிழ் தெரியாது என்றும் கன்னடத்தில் பேசுமாறும் கூறியுள்ளார். மேலும் சென்னைக்கே நேரில் வந்து விஜய் வீட்டின் முன்பாகக் கன்னடக் கொடியை ஏற்றிப் பறக்கவிடுவேன் எனப் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடல் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
