மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சவிதா பிரதான் என்ற அரசு அதிகாரி, அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றபோது, புற்றுநோயின் இறுதி நிலையில் இருந்த ஒரு சிறுமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அச்சிறுமி மிகவும் சோகமான குரலில், “மேடம், எனக்கு உங்களுடைய முடி மிகவும் பிடித்துள்ளது” எனக் கூறியுள்ளாள். சிறுமியின் வார்த்தைகளைக் கேட்ட அதிகாரி சவிதா, தன் தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபியின் போது தலைமுடியை இழந்த வலியைக் கருத்தில் கொண்டு உடனே மனமுருகியுள்ளார்.
பெண்களுக்குத் தலைமுடி என்பது மிகவும் பிரியமானது என்ற போதிலும், சிறிதும் யோசிக்காமல் தனது தலைமுடியை வெட்டி, அதனை விக் ஆகச் செய்து அச்சிறுமிக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஒரு பெண்ணின் அழகை விட மனிதநேயமே பெரிது என்பதை உணர்த்திய அந்த அதிகாரியின் இந்த நெகிழ்ச்சியான செயலை அறிந்து, சமூக வலைதளங்களில் பலரும் அவருக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
