போதைப்பொருள்பயன்படுத்திய வழக்கில் சினிமா தயாரிப்பாளர் திடீர் கைது – போலீசார் தீவிர விசாரணை!

By Elango on மார்கழி 8, 2025

Spread the love

சென்னையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தியதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் உள்ளிட்ட மூன்று பேரை கடந்த 20ம் தேதி திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். இதில் சர்புதீன் கொடுத்த தகவலின் படி சினிமா தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் என்பவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் சர்புதீனிடம் இருந்து போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. சினிமா என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ள தினேஷ் ராஜ் பிளாக் மெயில் என்ற படத்தை விநியோகம் செய்துள்ளார்.

நடிகர் தனுஷின் உறவினர் நடிக்கும் லவ் ஓ லவ் என்ற படத்தையும் அவர் தயாரித்து வருகிறார். கைதான தினேஷ் ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடன் தொடர்பில் உள்ள நடிகர்கள் நடிகைகள் யாருக்காவது அவர் போதைப் பொருள் விநியோகம் செய்தாரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிமியர் புட்சால் இந்தியா என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் தினேஷ் ராஜ் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.