தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் உடல்நல குறைவு காரணமாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து இணையத்தில் பலவிதமான செய்திகள் தினம்தோறும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் வீடியோ ஒன்றையும் பிரேமலதா வெளியிட்டு இருந்தார். இருந்தாலும் சில நாட்களுக்கு ஒரு முறை விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் பிரேமலதா, விஜயகாந்த் உடல்நிலை குறித்து கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், கேப்டன் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். விஜயகாந்துடன் இருப்பது நான் மட்டும்தான், அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து எனக்கு மட்டும்தான் தெரியும் அதனை நானும் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இருந்தாலும் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகிறீர்கள்.
இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு எங்களிடம் ஒரு வார்த்தை கேளுங்கள். கேப்டன் மீது அப்படி உங்களுக்கு என்ன வன்மம் என்று எனக்கு தெரியவில்லை. நன்றாக இருக்கும் மனிதரைப் பற்றி இப்படிதான் தவறான வதந்திகளை பரப்புவீர்களா. உங்களால் என் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் யாருக்காவது இப்படி ஏற்பட்டிருந்தால் இப்படி தான் தகவல்களை பரப்புவீர்களா. தவறான தகவல்களை தயவு செய்து பரப்பாதீர்கள் என்று கண்ணீர் மல்க பிரேமலதா பேசியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க