14 ஆம் நூற்றாண்டில் மதுரையில் பரவிய கொரோனா வைரஸ்? கொத்து கொத்தாக இறந்துபோன பொதுமக்கள்? என்னப்பா சொல்றீங்க!

By Arun on ஏப்ரல் 30, 2024

Spread the love

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் முடக்கிப்போட்டது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேர் இறந்துபோனார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் பொது மக்கள் வீட்டிற்குள்ளேயே அடங்கி கிடக்கும் நிலைமை உண்டானது. இதனால் பலருக்கும் வேலை பறிப்போனது. சிறு தொழில்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

   

இந்த நிலையில் பொ.ஆ. 14 ஆம் நூற்றாண்டிலேயே கொரோனா போன்ற ஒரு வைரஸ் மதுரையை பதம் பார்த்ததாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். அதாவது பொ.ஆ. 1340 முதல் 1344 ஆம் ஆண்டு வரையில் மதுரை சுல்தானாக ஆட்சி செய்து வந்தவர் கியாத்துதீன் முகமது தம்கானி. அந்த சமயத்தில் மதுரையில் திடீரென ஏதோ ஒரு கொள்ளை நோய் பரவியதாம்.

   

அந்த கொள்ளை நோயில் பொதுமக்கள் பலரும் இறந்துபோனார்களாம். பொதுமக்கள் மட்டுமல்லாது மதுரை சுல்தானும் அவரது குடும்ப உறுப்பினர்களுமே அந்த கொள்ளை நோய்க்கு பலி ஆகியிருக்கின்றனர். இது குறித்து 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பயணியாய் வந்த இபுன் பதூதா என்ற மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர், பல குறிப்புகளை எழுதியுள்ளாராம்.

 

Ibn Battuta

அந்த குறிப்பில் அவர் மதுரையில் ஒரு விநோதமான கொள்ளை நோய் ஒன்று பரவியது எனவும் அது பலரையும் காவு வாங்கியது எனவும் எழுதியுள்ளார். அந்த கொள்ளை நோய்க்கு இபுன் பதூதாவும் தப்பவில்லை. ஆனால் அவர் அந்த நோயில் இருந்து உயிர் பிழைத்து வந்துள்ளார்.

“அந்த மரணக் காய்ச்சல் என்னையும் தாக்கியது. நான் இங்கே மதுரையில் கிடைத்த புளியை எடுத்து தண்ணீரில் போட்டு கரைத்து குடித்தேன். மூன்று நாட்களில் எனக்கு அந்த நோய் சரியாகிவிட்டது” என்று இபின் பதூதா தனது குறிப்புகளில் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.