உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சாதி மறுப்புத் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது கொழுந்தனே சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் ரூபா, சுமார் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்தத் தாக்குதலில் அவரது வயிற்றில் இருந்த கருவும் சிதைந்துள்ளதோடு, தடுக்க வந்த ரூபாவின் கணவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட ரூபா மற்றும் ராதே ஷியாம் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஓராண்டிற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். ராதே ஷியாமின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் மீண்டும் ஊருக்குத் திரும்பியபோது, ராதே ஷியாமின் தம்பி விவேக், தனது அண்ணியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தலைமறைவாக உள்ள கொலையாளி விவேக்கைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாதி மறுப்புத் திருமணத்திற்காகச் சொந்தக் குடும்ப உறுப்பினரே ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் படுகொலை செய்துள்ள இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
