மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே மூண்டுள்ள சமூக வலைதளப் போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுத் தடுத்துள்ளதாக பவன் கல்யாண் குற்றம் சாட்டியிருந்தார். நாட்டின் முன்னேற்றத்தை விட அரசியல் கணக்குகளுக்கே எதிர்க்கட்சிகள் முன்னுரிமை அளிப்பதாகவும், பாலின நீதியை நிலைநாட்டும் சீர்திருத்தங்களை அவர்கள் முடக்குவதாகவும் அவர் தனது ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
பவன் கல்யாணின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை மகிழ்விப்பதற்காகப் பொதுமக்களிடம் பொய் சொல்ல வேண்டாம் எனச் சாடியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே அங்கீகரிக்கப்பட்டு விட்ட நிலையில், அதனை இப்போதும் அமல்படுத்த முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மத்திய அரசு தொகுதி மறுவரையறை என்ற போர்வையில் ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதாகப் பிரகாஷ் ராஜ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆந்திர மக்களின் சுயமரியாதையையும் மாநில உரிமைகளையும் அரசியல் லாபத்திற்காக அடகு வைக்க வேண்டாம் என பவன் கல்யாணை எச்சரித்துள்ள பிரகாஷ் ராஜ், இந்த விவகாரம் குறித்து நேரடி விவாதத்திற்குத் தான் தயார் எனச் சவால் விடுத்துள்ளார். “விளக்குவதற்காக உங்களுடன் விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா?” என அவர் விடுத்துள்ள கேள்வி, தற்போது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய சிக்கலான அரசியல் நகர்வுகள் தொடர்பாக இவ்விருவருக்குமிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
Please stop lying to citizens just to please Modi. Women reservation bill was approved in 2023 itself. It can be passed even now . But your gang wanted to pass Delimitation bill which would weaken the representation of South Indian states including Andhra Pradesh. Requesting you… https://t.co/LyQGy2Fh8E
— Prakash Raj (@prakashraaj) April 18, 2026
