CINEMA
இளையராஜாவின் கெரியரையே அழிக்கப் பார்த்த தமிழ்நாடு மின்சார வாரியம்! கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும்? அடப்பாவமே!
இளையராஜா தமிழ் சினிமாவின் இசை உலகை மூன்று தலைமுறைகளாக ஆண்டுகொண்டிருக்கும் முடிசூடா சக்கரவர்த்தி என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். தேனிக்கு அருகே பண்ணைபுரம் என்ற கிராமத்தில் பிறந்து இசையோடு வளர்ந்த இளையராஜா, சிறு வயதில் இருந்தே தனது சகோதரர்களுடன் பல கச்சேரிகளில் வாசித்து வந்தார்.
அதன் பின் சினிமா கனவுகளைச் சுமந்து தனது சகோதரர்களுடன் சென்னை வந்த இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மூலம் மிகப் பெரிய கதவு திறந்தது. முதல் திரைப்படமாக “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அமைந்தது.
இளையராஜாவின் வாழ்க்கை என்பது துக்கங்கள் மட்டுமே நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது. கூடுதலாக தமிழ்நாடு மின்சார வாரியமும் இளையராஜாவை கூடுதலாக கொஞ்சம் சோதித்தது. ஆம்!
அதாவது இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான “அன்னக்கிளி” திரைப்படத்தின் முதல் நாள் முதல் பாடலின் ரெக்கார்டிங்கை தொடங்கினார் இளையராஜா. அங்கே ஸ்டூடியோவில் இளையராஜாவின் ஆர்கெஸ்ட்ரா குழுவினருடன் பாடகர்கள், தயாரிப்பாளர், இயக்குனர் என பலரும் கூடியிருந்தனர்.
தனது முதல் பாடலை ரெக்கார்ட் செய்யத் தொடங்கும் வண்ணம், இளையராஜாவின் உதவியாளர் ஒருவர் “1,2,3 ஸ்டார்ட்” என்று கூறினார். ஸ்டார்ட் என்றவுடன் “டொப்” என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதாம். “இது என்ன அபசகுணமா இருக்கே, இது விளங்காது” என்று இயக்குனர் தரப்பில் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்களாம். இதனால் சங்கடத்திற்கு ஆளான இளையராஜாவும் அவரது குழுவினரும் நம்பிக்கையை மட்டும் விடவில்லை.
சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. அதன் பின் தனது முதல் படத்தின் முதல் பாடலை எந்த வித குழப்பமும் தயக்கமும் இன்றி ரெக்கார்ட் செய்யத் தொடங்கினார் இளையராஜா. அத்திரைப்படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அந்த அபசகுணத்தால் தமிழ் இசை உலகில் ஒரு புதிய சகாப்தம் உருவானதை யாராலும் மறுக்கமுடியாதுதானே!