தர்மபுரி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த கோமதி என்பவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் தற்போது கோமதி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றபோது அங்கிருந்த தனிப்பிரிவு காவலர் ராஜாராமுடன் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் திருமணம் கடந்த உறவில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் ராஜா ராம் வெண்ணாம்பட்டி பகுதியில் கோமதியை வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இந்த தகவல் ராஜா ராமின் குடும்பத்துக்கு தெரிய வந்ததும் பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதியை பார்ப்பதை ராஜா ராம் தவிர்த்து வந்துள்ளார். இது இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராஜா ராம் கோமதியை கொலை செய்ய முடிவு செய்தார். அதனால் ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் இருவருக்கும் சண்டை ஏற்படுவதாக கூறி இதனை தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று தர்மபுரி பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வருமாறு கோமதியை அனுப்பி வைத்துள்ளார்.
பிறகு அங்கு சென்று கிணற்றில் கோமதியை தள்ளி விட்டுள்ளார். தண்ணீரில் விழுந்த கோமதி அங்கிருந்த ஒரு கல்லை பிடித்துக் கொண்டு உயிர் தப்பினார். பிறகு கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து கோமதி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காவலர் ராஜாராமை கைது செய்தனர். திருமணம் கடந்த உறவால் ஏற்பட்ட விளைவு காரணமாக ராஜாராம் தனது வாழ்க்கையை தானே அழித்துக் கொண்டார்.
